Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!



      னது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.

அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும்கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச்சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார்.  "இனிய உதய'த்துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது...

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் திண்டுக்கல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது அது புனித பால் உயர்நிலைப் பள்ளியாய் உருமாறி உயர்ந்து நிற்கிறது.  நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். மிகமிக வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். அதேசமயம் என் உறவினர்கள் பலர் இசை, நாடகம், நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வர்களாக இருந்தார்கள். எனவே இசையும் நகைச்சுவையும் என் இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண்டன. அவை நான் பெற்ற வாழ்வின் கொடைகள்.

பொதுவாக, பேசிப்பேசியே பொழுதைக் கழிக்காதே வீணாகிவிடுவாய் என்று அறிவுரை சொல் லுவார்கள். ஆனால் இந்த அறிவுரை உங்கள் விசயத் தில் பொய்த் துப் போய்விட்டதே. எப்படி?

இதுவும் எனக்குக் கிடைத்த இயற்கை யின் கொடைதான். பொதுவாக பேசிப்பேசியே வீணாகக் கழிக்கும் பேச்சு, பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். நேரத்தையும்  அது விரயமாக்கும். ஆனால் நான் மேடையில் பேசும் பேச்சு, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. என் பேச்சைக் கேட்பவர்கள் இன்னும் பேசுங்கள் என்று கேட்பதும் கட்டணம் கொடுத்து என்னைப் பேச அழைப்பதும்தான் இதுவரை நான் கண்டது. மனிதன், மற்றவர்களிடம் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ளக் கிடைத்த ஓசை வடிவம்தான் பேச்சு. சிந்தனையாளர்களின் பேச்சு வரலாற்றில் பல அரிய நல்ல காரியங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. அறிஞர் அண்ணாவைப் போன்ற தலைவர்களின் பேச்சு, அரசியலில் மிகப்பெரிய புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் பேச்சு, நம்பமுடியாத அளவிற்கு சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

எனவே பேச்சுக்கலை என்பது பொழுதைப் போக்கக் கூடிய விசயம் அல்ல; பொழுதை ஆக்கக்கூடிய விசயம். எனது பேச்சாற்றலும் அப்படிப்பட்ட புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

பள்ளிப் பருவத்தில் நீங்கள் பேசி, பரிசு பெற்றதுண்டா?

புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பா வைப் பெற்றேன். அது மற்றவர்களுக்கு வேண்டு மென்றால் வெறும் பிளாஸ்டிக் டப்பா. என்னைப் பொறுத்தவரை நான் முதன்முதலில் வாங்கிய கோல்ட் மெடல். அதுதான் இன்றுவரை எனக்குள் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் முதல்மேடை அனுபவம்?

நான் முதன்முதலாகப் பட்டிமன்றம் பேசியது திண்டுக்கல் மேட்டுப்பட்டி பங்கு சர்ச் விழாவில் தான். அப்போது நடுவராக இருந்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற ஜாம்பவான் அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையா. ஏசுநாதர் செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? என்ற தலைப்பில்  நடந்த அந்த பட்டி மன்றத்தில் நான், சமயப் புரட்சி என்ற தலைப்பில் பேசினேன். ஆனால் அன்றைய பேச்சு எனக்கே பிடிக்கவில்லை. காரணம் அது சரியாய் சோபிக்கவில்லை. "ஆஹா! வேலைக்கா காது போலிருக்கே' என்று மனம் நொந்துபோனேன். அப்போது அந்த ஆலயத்தின் பங்குத் தந்தைதான், ""கவலைப்படாதே, நீ நன்றாகப் பேசினாய். உன்னிடம் விசயம் இருக்கிறது'' என்று என்னை உற்சாகப்படுத் தினார். அந்த உற்சாகம்தான், அந்த முதல் மேடையில் தோற்ற என்னை, இன்று வெற்றியாளனாக ஆக்கியிருக் கிறது.

உங்கள் பேச்சாற்றலுக்குக் கிடைத்த  மிகப் பெரிய பாராட்டாக எதைக் கருதுகிறீர்கள்?

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இலக்கியவாதியும், தேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் தலைவர் என்ற மகுடங்களோடு கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவரும் முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரிடம், நான் பெற்ற பாராட்டுகளையே மிகப்பெரிய பாராட்டுகளாகக் கருதுகிறேன். எனது பட்டிமன்றப் பேச்சை முழுதாய் உட்கார்ந்து கேட்டு ரசித்து, அகம் மகிழ்ந்து என் நெற்றியிலே முத்தமிட்டு வாழ்த்தினாரே, அதைவிட வேறு என்ன  பாராட்டு எனக்கு வேண்டும்? நான் பெற்ற முத்தங்களிலேயே மறக்க முடியாத முத்தப் பரிசு அவரது  முத்தப் பரிசுதான். அதுமட்டுமல்லாது 2011-ல் என்னைப் பாராட்டி கலைமாமணி விருதை தனது கரங்களால் எனக்கு வழங்கி சிறப்பித்தி ருக்கிறார் கலைஞர்.

உங்களால் மறக்கமுடியாத மேடை அனுபவம்?

 பட்டிமன்றங்களுக்கு வருவதற்குமுன் 85-களில் ஆசிரியர் போராட்ட மேடைகளில் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய "கையில வாங்கினேன் பையில போடலை, காசு போன இடம் தெரியலை' என்ற பாடலைப் பாடி அதற்கு விளக்கமும் சொன்னேன். அப்போது தள்ளுவண்டி வைத்துப் பிழைக்கும் ஒரு வயதான பெரியவர், என்னிடம் வந்து, தன் வேட்டி முடிப்பில் இருந்து மூன்று ரூபாய்க்கான நாணயங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, "நீ நல்லா பேசுறே, பெரிய ஆளா வருவே' என்று வாழ்த்தி, வியர்வை வடிந்து கொண்டிருந்த தனது முகத்தை என் கைகளில் பதித்து, ஒரு முத்தம் கொடுத்தார். எனக்குக் கிடைத்த மக்களின் மாபெரும் அங்கீகாரமாக இதைத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

உங்கள் திருமணம் காதல் திருமணமா?

ஆமாம். காதல் திருமணம்தான்.

நீங்கள் கேட்டு வியந்த பேச்சு யாருடைய பேச்சு?

முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தபோது, நிருபர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். அப்போது கலைஞர், "ஒரு தாய் தனது குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகிறபோது அது முகத்திலே சிறுநீர் கழித்துவிட்டால், அந்தக் குழந்தையை தாய் வெறுப்பாளா? மாட்டாள். தன் முகத்தை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிப்பாள். அந்தத் தாயைப் போலத்தான்  நானும்' என்றார். இப்படிப் பட்ட  கலைஞரின் சமயோஜிதப் பேச்சாற்றல் பலரை யும் வியக்க வைத்திருக்கிறது.

நீங்கள்  படித்த ஆசிரியர்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன சொல்வார்கள்?

எனது ஆசிரியர்களை நான் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர்கள், "வகுப்பில் நாங்கள் பார்த்த உனக்கும் இப்போது இருக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையே' என்று வியப்பார்கள். நான் படித்த காலத்தில் செய்த சேட்டைகளால் பெற்ற தண்டனைகள் அதிகம். அவர்களது அடிகளால் ஏற்பட்ட வடுக்களை நான் அவர்களிடம் காட்டியிருக்கிறேன்.

அப்போது அவர்கள் ஒருவித கூச்சத்தோடு, இப்போதைய எனது நிலைக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள் பாருங்கள். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே இல்லை.

உங்கள் பலம் எது? பலவீனம் எது?

எந்தத் தலைப்பு கிடைத்தாலும் அதைப் பற்றிப் பேசமுடியும்- மக்களைக் கவரமுடியும் என்று நினைப்பது எனது பலம். அளவுக்கு அதிகமாக எளிமையாக இருப்பதும், பிறர் சொல்வதை உடனே நம்புவதும் எனது பலவீனம்.

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களைக் கலங்க வைத்த  சம்பவம் எது?

எனது தந்தையார் பெயர் இன்னாசி. உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தவர். எனக்கும் அப்பாமீது அளவு கடந்த பிரியம். அவரோடு 24-8-98 இரவில் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் மேலும் பேசிக்கொண்டிருக்க அப்பா ஆசைப்பட்டார்.

ஆனால் நானோ, அப்பா தூங்கட்டுமே என்று விரைவாக விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது இறப்புச் செய்தி வந்து என்னை நிலைகுலைய வைத்தது. அவர் கடைசியாக விரும்பியதுபோல் இன்னும் கொஞ்சம் நான் பேசிக்கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சியில் மேலும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என் அப்பாவின் மறைவுதான் என்னை ரொம்பவே கலங்க வைத்துவிட்டது.

அரசியல் மேடைகளிலும் தைரியமாக ஏறுகிறீர்களே எப்படி?

 நான் தற்போது திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் ஏறிப் பேசிவருகிறேன். ஜாதி, மதம்... இந்த இரண்டும்  இல்லாமல் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழி இல்லாமல் எந்த மனித இனத்தாலும் வாழமுடியாது. நம் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் ஜாதிக் கட்டமைப்பு களைத் தகர்த்தெறியவும் தமிழர்களின் உரிமைகளுக் காகக் குரல்கொடுக்கவும் உழைத்துவருகிற ஒரே இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான் அந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். நான் நினைப்பது சரி என்று தோன்றியதால் தி.மு.க. மேடைகளுக்கு வந்தேன். அதன் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருப்பதால்தான், துணிச்சலாக தி.மு.க.வின் அரசியல் மேடைகளில் ஏறுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்?

புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன். மொழிப் பற்று, மூட நம்பிக்கை ஒழிப்பு, அழகியல் என எல்லா அம்சங்களும் கலந்த பாடல்களை எழுதி தமிழ் உணர்வை யும் ஊட்டி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் அவர். அவரது "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடலைப் பாடிதான் எனது எல்லாப் பட்டிமன்ற பேச்சுகளையும் நான் தொடங்குகிறேன்.

நீங்கள் சமீபத்தில் ரசித்த படைப்பு எது?

பேராசிரியர் சுப. வீரபாண்டி யன் எழுதிய "திராவிடத்தால் எழுந்தோம்' என்ற நூல்தான் நான் சமீபத்தில் படித்து, ரசித்து, சிந்திக்கத் தொடங்கிய நூல். திராவிட இயக்க வரலாற்றையும் திராவிட இயக்கம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங் களையும் அந்த நூல் அற்புதமாக விளக்குகிறது. பஞ்சமர்களுக்கும்  பெண்களுக்கும் சுயமரியாதை யைப் பெற்றுக் கொடுத்த தோடு, அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்த இயக் கம் திராவிட இயக்கம்  என்பது போன்ற தகவல் களை அழகாக மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் விதைத் திருக்கிறார் சுப.வீ. எனக் குள் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் என்று கூட இதைச் சொல்லலாம்.

திரைப்படப் பாடல்களை மேடைகளில் அலசி ஆராய்கிற உங்களுக்கு, யாருடைய பாடல்கள் பிடிக்கும்?

அன்று முதல் இன்றுவரை நான் ரசிப்பது, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களைத்தான். ஆழமான சிந்தனைகளை எளிய தமிழில் வெளியிட்டவர் அவர். பொதுவுடமைச் சிந்தனைகளை மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் பிரகடனப்படுத்தும் பாடல்கள் அவருடையவை. கல்யாணப் பரிசு படத்தில் "துள்ளாத மனமும் துள்ளும்' என்ற பாடலில் "துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்' என்ற வரிகளில் மிகச் சிறந்த கற்பனையை அள்ளிவீசியிருப்பார். இப்போது  அப்படிப்பட்ட பாடல்களை அதிகம்  கேட்க முடிவதில்லை. இப்போது வரும் பாடல்களில் பெரும்பாலானவை வெறும் டண்டனக்காதான்.

உங்கள் திரையுலக அனுபவங்கள் எப்படி?

நான் நடித்த ஒரே படம் "கங்கா கௌரி'. நடிகர் அருண் விஜய், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருக்கு அப்பாவாக நடித்தேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை அந்த ஒரே படத்தில் உணர்ந்துகொண்டேன். என்னை இயக்கிய இயக்குநர் மாதேஷ்வரன், தயாரிப்பாளர் விஷ்ணுராம் ஆகியோரை வாழ்நாள் முழுக்க என்னால் மறக்க முடியாது.

உங்களை வியக்க வைப்பவர்கள் யார்?

ஒருவர் கலைஞர். காரணம் 89 வயதிலும் ஓயாத உழைப்பும் அதீத நினைவாற்றல் கொண்டவராகவும் இருக்கிறார். இந்த வயதிலும் தொண்டர்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவரது புன்னகை உதிர்வதே இல்லை. அவரது தன்னம்பிக்கை எவருக்கும் வராது.

இன்னொருவர்  கவியரசு கண்ணதாசன். உயர் நிலை வகுப்பைக்கூடத் தாண்டாத முத்தையா என்ற கிராமத்து வாசி, காலத்தால் அழியாத திரைக் காவியங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

அதோடு அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி தமிழிலக்கியத்தையே திகைக்க வைத்திருக்கிறார்.

அடுத்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவைக் கருத்துகள் மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளை முற்போக்காகக் கூறியவர் அவர். அவரது இசையாற்றலும் வியக்கவைப்பதாகும். இதைவிட எல்லா நேரத்திலும் எந்த நிலையிலும் எவருக்கும் உதவக்கூடிய அவரது கொடைக்குணம் என்னை வியக்கவும் நெகிழவும் வைக்கிறது.

நீங்கள் நினைத்து நினைத்து சிரித்த விசயம் எது?

தூத்துக்குடி அருகில் கீழஈரால்  பக்கம் ஒரு கிராமம். அங்கு எங்களது பட்டிமன்றம் நடந்தது.

அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த பேச்சாளர்  வதிலை ராஜா  பேச எழுந்தபோது, மேடையே  ஒரு குலுங்கு குலுங்கி பின்னோக்கி நகரத் தொடங்கி விட்டது. காரணம் மிகவும் குண்டான அவரது எடையை அந்த டிராக்டர் டிரெய்லர்மீது அமைக்கப் பட்ட மேடையால் தாங்க முடியவில்லை.  அப்பப்பா அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு குபீரென்று பொத்துக்கொண்டு வருகிறது.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்கள் போர்க்களத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி திரட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும் போய் வந்தேன். தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் எங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக் கான நிதியைத்  திரட்டினேன். இவற்றையே எனது சாதனைகளாகக் கருதுகிறேன்.

சிறந்த பேச்சாளராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கை யோடு மேடை ஏறுங்கள். ஒவ்வொரு மேடையையும் புது மேடையாகக் கருதுங்கள். மடை திறந்தாற்போல் பேச்சு வர, நிறைய நூல்களைப் படியுங்கள். உங்களுக் கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியின் ரகசியம் எது?

தன்னம்பிக்கை, பணிவு, எளிமை. அதைவிட எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் குணம்.

நேர்காணல்: அமுதா தமிழ்நாடன்


நன்றி: நக்கீரன் 
01.11.2012 

2 comments: